இதயத்தை பாதுகாக்க 25 வழிகள்..!

Related image

இன்றைய காலகட்டத்தில் சில திடீர் மரணங்களுக்கு மிக முக்கியக் காரணமாக இருப்பது மாரடைப்பு போன்ற இருதய நோய்களாகும்.

மாரடைப்புக்கான காரணம்..!

உடல் முழுவதும் ரத்தம் பாய்ச்சும் அதிமுக்கிய வேலையைச் செய்வது நம் இதயம். 'லப் டப்’ தாள லயத்தோடு இதயம் துடித்து இயங்குவதால்தான், ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் திசுக்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இப்படி உடல் முழுக்க ரத்தத்தை பம்ப் செய்யும் இதயம் இயங்கவும் ரத்தம் தேவை. இதயத்துக்குத் தேவையான இந்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்படும்போதுதான், மாரடைப்பு ஏற்படுகிறது. ரத்தக் குழாயில் கொழுப்புப் படிவதாலோ அல்லது ரத்தம் உறைந்துபோவதாலோ அடைப்பு ஏற்படலாம். இதனால், இதயத்துக்கு செல்லும் ஆக்சிஜன் நிரம்பிய ரத்த ஓட்டம் தடைப்பட்டு, இதயத் தசைகள் செயல் இழக்கும். இதைத்தான் மாரடைப்பு என்கிறோம்.

மாரடைப்பைத் தவிர்க்க முடியும்..!


1. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ரத்தத்தில் கொழுப்பு, புகை பிடித்தல், உணவில் அதிகக் கொழுப்பு, உடல் உழைப்புக் குறைவு, மன அழுத்தம், மரபுரீதியாகக் குடும்பத்தில் யாருக்காவது மாரடைப்பு ஏற்பட்டிருத்தல் என கொரனரி (இதய ரத்தக் குழாய் அடைப்பால் ஏற்படும்) மாரடைப்பு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. உங்கள் மருத்துவரை அணுகி உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை - கொழுப்பு அளவினைத் தொடர்ந்து பரிசோதனை செய்து, தேவைக்கு ஏற்ப மருத்துவச் சிகிச்சை பெற்றாலே, மாரடைப்பைத் தவிர்க்கலாம்.

2. குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒரு முறையாவது ரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்துகொண்டால், மாரடைப்பு அபாயத்தை முன்கூட்டியே அறிந்து தடுக்க முடியும். ரத்த அழுத்தம் சராசரிக்கும் அதிகமாக இருந்தால், இந்தப் பரிசோதனைகளை அடிக்கடி மேற்கொள்வது நல்லது. சராசரி ரத்த அழுத்தம் என்பது (ஐடியல் பிளட் பிரஷர்) 130/80 எம்.எம்.எச்.ஜி-க்கும் குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

3. கொரனரி இதய நோய் வருவதற்கு சர்க்கரை நோய் ஒரு மிக முக்கியக் காரணம். எனவே, குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒரு முறை கட்டாயம் சர்க்கரை நோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

4. உங்கள் உடல் எடை அதிகமாக இருந்தால் அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது சர்க்கரை நோய் இருந்தால், உடனடியாக சர்க்கரை நோய் பரிசோதனை செய்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

5. குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைப் பரிசோதனை செய்ய வேண்டும். மாரடைப்புக்கான காரணிகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் கொழுப்புப் பரிசோதனையை டாக்டரின் ஆலோசனைப்படி அவ்வப்போது மேற்கொள்ள வேண்டும்.

6. மாரடைப்புக்கான அபாயத்தைக் குறைக்க, இதயத்துக்கு ஆரோக்கியம் தரும் உணவு அவசியம். கொழுப்பு, சர்க்கரை, உப்பு ஆகியவற்றின் அளவு குறைவாக இருக்கும் உணவுப் பொருட்களே இதயத்துக்கு நல்லது. அதிக அளவில் பழங்கள், பச்சைக் காய்கறிகள், தானியங்கள், கொழுப்பு குறைவான பால் பொருட்கள் போன்றவை மாரடைப்பு வராமல் தடுக்கும்.

7. குறைந்த கொழுப்பு மற்றும் அதிக அளவில் புரதச் சத்து நிறைந்த பீன்ஸ், மாரடைப்புக்கான அபாயத்தைக் குறைக்கிறது. அசைவம் சாப்பிடுபவர்கள், 'ரெட் மீட்’ என்று சொல்லக் கூடிய ஆடு - மாடு போன்றவற்றின் இறைச்சியைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவற்றில் அதிக அளவு கொழுப்பு உள்ளது.

8. தோல் நீக்கிய கோழி இறைச்சி மற்றும் மீன் போன்றவை ஆரோக்கியமானவை. ஆனாலும், அதிக அளவில் எண்ணெய்விட்டுப் பொரித்துச் சாப்பிடுவது தவறு.  முட்டையின் வெள்ளைப் பகுதியில் அதிகப் புரதச் சத்து உள்ளது. ஆனால், அதன் மஞ்சள் கரு அதிகக் கொழுப்பு மிக்கது. எனவே, முட்டையின் மஞ்சள் கருவைத் தவிர்ப்பது மாரடைப்புக்கான வாய்ப்பைக் குறைக்கும்.

9. பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அதில் அதிக அளவில் உப்பு உள்ளது. அது உயர்  ரத்த அழுத்தத்தைத் தூண்டி விடும்.

10. அதிக அளவில் சர்க்கரை உள்ள உணவுப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும். அந்த உணவுகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கூட்டிவிடும். இதனால், அதிகப்படியாக உடல் எடையும் கூடும்.

11. 'ஒமேகா-3-ஃபேட்டி ஆசிட்’ மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கும் தன்மை கொண்டது. மேலும், இது உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும். ஆளி விதை (Flax seed) எண்ணெய், வால்நெட் எண்ணெய், சோயாபீன் எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவற்றில் இந்த ஒமேகா-3-ஃபேட்டி ஆசிட் உள்ளது. சால்மன் போன்ற சில மீன் வகைகளிலும் இந்த ஒமேகா - 3-ஃபேட்டி ஆசிட் நிறைந்து உள்ளது.

12. சேச்சுரேட்டட் கொழுப்பு (Saturated fat) மற்றும் டிரான்ஸ் கொழுப்பு (Trans fat) ஆகியவை (ரத்தத்தில் கொழுப்பு அளவை அதிகரிப்பதன் மூலம்) கொரனரி மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும். அதனால், இவற்றையும் தவிர்க்க வேண்டும்.

13. இறைச்சி, பால் பொருட்கள், தேங்காய் எண்ணெய், பனை எண்ணெய் ஆகியவற்றில் சேச்சுரேட்டட் கொழுப்பு அதிக அளவில் உள்ளது. பொரிக்கப்பட்ட துரித உணவுகள், பேக்கரி பொருட்கள், அடைக்கப்பட்ட நொறுக்குத் தீனிகளில் அதிக அளவில் டிரான்ஸ் கொழுப்பு உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

14. அதிக அளவில் மது அருந்துவது உடல்பருமனுக்கு வழிவகுக்கிறது. மேலும், சர்க்கரை நோய்க்கான வாய்ப்பையும் அதிகரிக்கிறது. எனவே, மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.

உடற்பயிற்சி..!
15. ஒரு நாளைக்கு குறைந்தது 30 முதல் 45 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும். தொடர் உடற்பயிற்சிகள் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கின்றன. உங்களுக்குரிய ஆரோக்கியமான எடையை சரிவரப் பராமரியுங்கள். இதய நோய்களை ஏற்படுத்தும் உயர் ரத்த அழுத்தம், உயர் கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவுகளைக் கட்டுக்குள் வைத்திருக்க உடற்பயிற்சி அவசியம்; மன அழுத்தத்தைக் குறைக்கவும் உடற்பயிற்சி உதவும்.

16. தோட்டப் பராமரிப்பு, வீட்டு வேலைகள், மாடிப்படிகளில் ஏறி இறங்குவது, நடப்பதும் கூட நல்ல உடற்பயிற்சிதான். உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக எப்போதும் உடற்பயிற்சி செய்துகொண்டு இருக்க வேண்டும் என்று இல்லை. யோகா மற்றும் தியானப் பயிற்சி போன்றவை மன அழுத்தம் மற்றும் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதால், மாரடைப்பு அபாயமும் குறையும்.

ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரித்தல்..!


17. உங்கள் உடல் எடை ஆரோக்கியமானதுதானா என்பதை பாடி மாஸ் இன்டெக்ஸ் மூலம் கணக்கிடலாம். பி.எம்.ஐ. புள்ளிகள் 25 அல்லது அதற்கு மேல் இருந்தால், உஷாராகிவிட வேண்டும்.

18. இடுப்பு அளவைக் கணக்கிடுவதால், வயிற்றுப் பகுதியில் எவ்வளவு கொழுப்பு உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது. ஆண்களுக்கு சராசரி இடுப்பு அளவு என்பது 40 இன்ச் அளவுக்கும் குறைவாக இருக்க வேண்டும். பெண்களுக்கு 35 இன்ச் அளவுக்கும் குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

19. பெரியவர்களுக்கு உடல் எடை கூடுகிறது என்றால், அது பெரும்பாலும் தசை எடை கூடுதலாக இருக்காது, கொழுப்பு அதிகரிப்பாகத்தான் இருக்கும். அதிக அளவிலான உடல் எடை என்பது உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு அளவை அதிகரிப்பது, சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுப்பதுடன் மாரடைப்புக்கான வாய்ப்பையும் அதிகரிக்கும்.

20. குறைந்த அளவிலான உடல் எடைக் குறைப்பு கூட மிகப் பெரிய பலனை அளிக்கும். உங்கள் எடையை வெறும் 10 சதவீதம் குறையுங்கள், அது உங்கள் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதுடன், ரத்தத்தில் கொழுப்பு அளவையும் குறைத்து, சர்க்கரை நோய்க்கான வாய்ப்பையும் குறைக்கிறது.

21. புகை பிடிப்பது, புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துங்கள். மாரடைப்பு ஏற்பட மிக முக்கியக் காரணங்களில் ஒன்றாக இருப்பது புகையிலைப் பழக்கம். சிகரெட் புகையில் உள்ள நிகோடின் என்ற நச்சு ரத்தக் குழாயினை சுருக்கி, இதயத் துடிப்பு எண்ணிக்கை மற்றும் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது. சிகரெட்டில் உள்ள கார்பன் மோனாக்சைடு ரத்தத்தில் ஆக்சிஜனுக்கு மாற்றாகப் போய் உட்கார்ந்து கொள்கிறது. இதனால், உடலுக்குத் தேவையான போதுமான ஆக்சிஜன் கிடைப்பதற்காக (அதிகம் ரத்தம் செலுத்தும்படி) இதயம் கூடுதலாக வேலை செய்யவேண்டி இருக்கிறது. நீங்கள் புகைப்பதை நிறுத்தினால் அடுத்த ஓர் ஆண்டுக்குள் ஆச்சரியப்படத்தக்க வகையில் இதய நோய்க்கான வாய்ப்புகளும் குறைந்துவிடும். புகைப்பழக்கம் இல்லாத, ஆனால் ஒருவர் புகைத்துவிட்ட காற்றை சுவாசிப்பவருக்கும் கூட பாதிப்பு ஏற்படும். நீங்கள் புகைப்பதால், புகைப்பழக்கமே இல்லாத உங்கள் நண்பர்கள், குடும்பத்தினரும்கூட பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

மருந்து-மாத்திரைகள்..!

22. உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அதிகக் கொழுப்பு போன்ற பிரச்னைகள் இருந்தால், டாக்டர்கள் பரிந்துரைத்திருக்கும் மருந்து-மாத்திரைகளைத் தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை உங்களின் இதய ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு பைபாஸ் அறுவைச் சிகிச்சை அல்லது ஆஞ்சியோபிளாஸ்டி செய்ய வேண்டும் என்று டாக்டர் பரிந்துரைத்தால், உடனடியாக அதைச் செய்து கொள்ளுங்கள். பயம் காரணமாகத் தள்ளிப் போடாதீர்கள்.

23. மாரடைப்புக்கான அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லுங்கள். மருத்துவமனைக்குச் செல்லும் முன் ஆஸ்பிரின் மாத்திரையைப் பயன்படுத்துங்கள். அது இதயத் தசைப் பாதிப்பைக் குறைக்கும்.

24. தொடர் மருத்துவப் பரிசோதனை, ஆரோக்கியமான வாழ்க்கைச் சூழ்நிலை, மாரடைப்புக்கான காரணிகளைக் கட்டுப்படுத்துவது போன்றவை நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும்.

பரிசோதனைகள்..!

25. எளிய ஈ.சி.ஜி. பரிசோதனை மூலம் வலி இன்றி ஒருவரின் இதய மின் செயல்பாட்டைக் கண்டறிய முடியும். இது இதயம் எவ்வளவு வேகமாகத் துடிக்கிறது என்பதைக் காட்டும். இதயம் எந்தளவு பாதிக்கப்பட்டு உள்ளது என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு உரிய சிகிச்சை அளித்தால், மாரடைப்பு வருவதைத் தடுக்க முடியும்.

உடலில் எங்கு கொழுப்பு அதிகமாக உள்ளது என்பதைக் கண்டறிவது இப்போது எளிமை. சாதாரண சி.டி. ஸ்கேன் எடுத்துப் பார்த்தாலே, கொழுப்பு தோலுக்கு அடியில் உள்ளதா அல்லது வயிற்றுப் பகுதிகளில் உள்ளதா என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்துவிட முடியும். இதயத் தசைகளுக்குச் செல்லும் ரத்தக் குழாயில் எவ்வளவு கொழுப்பு உள்ளது? எத்தனை ஆண்டுகளாக உள்ளது என்பதை 320 ஸ்லைஸ் சி.டி. ஸ்கேன் மூலம் கண்டறிய முடியும். எதிர்காலத்தில் ஒருவருக்குக் கொழுப்பு அடைப்பு ஏற்படுமா என்பதையும் துல்லியமாகச் சொல்லிவிட முடியும். ரத்தக் குழாயில் 0.5 மி.மீ. அளவுக்குக் கொழுப்பு படிந்திருந்தால் கூட, இந்தப் பரிசோதனை மூலம் கண்டறிந்து அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

Source : கல்விச்சோலை
Previous Post Next Post